Dienstag, 14. Mai 2013

தப்பித்துக்கொள்!!!

தப்பித்துக்கொள்!!!

நல்ல உள்ளத்தை
நாளும் போற்று
எல்லோரும் வாழ
இனிது பணியாற்று

மாயவலைகளில்
மயங்கிவீழாதே
ஆய கலைகளை
அறிந்து முன்னேறு

தீய நினைவுகளை
தீயிட்டுக் கொழுத்து
தூய நினைவுகளால்
துணிவினை ஏற்று

வேதங்கள் போற்று
வேந்தனை வேண்டு
நாதங்கள் மீட்டியே
நாளும் பண்பாடு

Sonntag, 12. Mai 2013

உயிரோடு உயிர்கோர்ப்போம்

 

ஏதும் அறியாமல்
எண்ணம் பிறக்குது
போதும் போதுமுன்
பேசும் நினைவுகள்

பொங்கும் ஆசைகள்
கோலம் போட
போகும் பாதையோ
நீளமாக
அங்கும் இங்கும்
அன்பு வெள்ளமாக
சிந்தும் நதி
சந்தம் சொல்லிப்பாடுதே

வள்ளுவனின்
வார்த்தைக்குள்ளே
வாழ்ந்து
வாழும் காலமெல்லாம்
இருப்போம் சேர்ந்து
உள்ளம் எங்கும்
இன்பம் பொங்க
உயிரோடு
உயிர்கோர்ப்போம்
உணர்வோடு
ஒன்றாகுவோம்
நாமே..

Donnerstag, 25. April 2013

உன் நினைவு

உன் நினைவு

ஊற்றாக உள்ளே
உன்நினைவு பெருகுது
காற்றாக விரிந்தே
கவிதையாக மலருது

மாற்றம் கேட்டு
மனமும் தவிக்குது
நேற்றும் இன்றும்
நெஞ்சம் துடிக்குது

உரிமை உணர்வோடு
உயிரும் பேசுது
எரியும் நெருப்புக்குள்
எண்ணங்கள் வாழுது

வெற்றியின் வேர்தேடி
வேதனைகள் நீளுதே
பற்றிய கொடிபோல்
பாசமிங்கு படருதே

கம்பனுக்கு மகளாகி
கண்ணுக்குள் தேடியே
நம்பவேண்டுமென்றே
நாளெல்லாம் பாடுகின்றேன்

வெள்ளைக்காரிகள்!!!


வெள்ளை நிலாக்கள்
வீதி ஊர்வலம்
வருகிறார்கள்

கள்ளத்தனம்
கண்ணிலில்லை
காமத்தாக்கம்
ஏதுமில்லை

கொள்ளை போக
ஓன்றுமில்லை
கொடியில் பூக்கும்
முல்லை பூக்கள்

பாதி உடையோ
சரிந்து விழ
மீதி நடையில்
தெரிந்து வர

அந்தரங்கங்கள்
ஆடி வர
இந்திர பெண்போல்
இவர்கள் திரிகிறார்கள்

மேலாடை கட்டிய
மின்னல் தாரகைகள்
நூலாடைக்குள்
நுழைந்து வாழாமல்

பாலாடை நீக்கி
பார்த்தால் என்ன
பார்வைகளில்
பேதமில்லை

எண்ணங்களில்
கறைகளின்றி
எல்லோரிடமும்
பேசுகிறார்கள்

தொட்ட போதும்
கை விட்ட போதும்
காதலில்லை…

காதலென்ற
சொல்லுக்குள்
வாழ்க்கையுமில்லை..

இந்த நாளை
சுவைத்து
இன்பமுடன்
வாழ்கிறார்கள்…

நொடிக்கொருமுறை
பூக்காவிட்டாலும்
அடிக்கடி
இறந்து மலர்கிறதே
இந்தக்காதல்
எப்படி..!!!



Montag, 22. April 2013

கவிதையும் நானும்...


எதுகையும் மோனையும்
எனக்கிங்கே தெரியாது
எழுதிடும் போதினிலே
எதுவுமே தோன்றாது

அது சரியா பிழையாவென்று
எண்ணவும் வாராது
உண்மையை சொல்ல
உள்ளம் துடிக்கிறதே

வடிவான தமிழில்
வளைத்துப்பேசவும் வாராது
வாழ்வினில் நடப்பதை
வார்த்தையில் வகுக்கிறேன்

கண்ணுக்குள் வளர்கின்ற
கற்பனைக்கனவுகளையும்
பண்ணாக பாடிவிடும்
பாவியின் நெஞ்சமும்

கவிதைக்கு அழகென்று
கருவை அழித்துவிட்டு
கைத்தட்டு கேட்டுநிற்கும்
கையேந்தி நானில்லை

பொய்பூசி மைபூசி
புகழுக்காக தேன்பூசி
உண்மையை புதைத்து
உருவாக்க பிடிக்கவில்லை

பாசம் என்றபெயரோடு
வேசம் தரித்து நிற்கும்
மோசக்காரர்கள் எல்லாம்
மாற வேண்டுகின்றேன்

பொய்யை விற்று
மேன்மை காணமுடியுமா
வெறும் வார்த்தை
கோர்த்து உயிர்வாழமுடியுமா

நிர்வாணம் அழகில்லை தான்
நிஜங்களை ரசிப்பதற்காக
அலங்காரம் செய்யலாம்
அதுவொன்றும் தவறில்லை

பிறக்கின்ற கவிதைகள்
பேசவேண்டாமா சொல்
சுமக்கின்ற குழந்தைகள்
சுகமாக்க வேண்டாமா

வாழ்க்கை கடலிலே
நல்லது மட்டுமாவுள்ளது
பொங்கும் கடலும்
புயலும் இல்லையா

அலைகளுக்கு இடையினில்
அமைதியும் இருக்கிறது
கரைகளை தாண்டிட
ஆசையாய் துடிக்கிறதே


Mittwoch, 3. April 2013

தோளோடு சாய்ந்திட வா ...

தோளோடு சாய்ந்திட வா ...
 
 
அழகான பாடலே
அடி நெஞ்சை ஆளுதே
பழகிய நினைவுகள்
பறந்தெங்கோ போகுதே

இதமான நாளிலே
இதயமும் மகிழுதே
பருவத்தின் மாற்றங்கள்
பனிப்பூவாய் விழுகுதே

கண்ணுக்குள் காட்சிகள்
கலந்தென்னை மீட்டுதே
பெண்ணுக்குள் சாட்சிகள்
பேசாமல்பேசி வாட்டுதே

வெண்நிற மேகத்துக்குள்
விளையாடும் நிலவே நில்
மண்ணினில் மலரொன்று
மடிவதும் சரிதானா சொல்

பாலோடு பழம்கொண்டு
பரிமாற விருந்துண்டு
தோளோடு சாய்ந்திட
துணையாக வா இன்று

நாளோன்று நீங்கினால்
நாம் தேடி பார்ப்போமா
நூலாக தேய்கின்றேன்
நீ அதை அறிவாயா...

Freitag, 22. März 2013

வெற்றி தரும்

வெற்றி தரும்

 

ஊற்றெடுக்கும்

நினைவுகளை
ஓரங்கட்டி
வைத்தால்

நேற்று முளைத்த
வேதனையும்
நெஞ்சுக்குள்ளே
இருந்துவிடும்

காற்றினிலே
கவிதையாக்கி
கைப்படவே
எழுதிவிட்டால்

வெற்றிடத்தை
நிரப்பிவிடவே
வேறு எண்ணம்
தோன்றிவிடும்

சுற்றிவரும் உலகம்
அதைப் பற்றியதே
வாழ்க்கையும்

முற்றிவிடும் ஞானம்
முளித்திருந்தால்
போதும்

வெற்றி தரும்
விதையாய்
வசந்தம்
வீட்டினுள்ளே
நுழையும்!!

Donnerstag, 21. März 2013

நேசக்குழந்தைகளாவோம்


நேசக்குழந்தைகளாவோம்


பொல்லுபிடித்துக்கொண்டும்
புதுக்கவிதை பாடுவோம்
பூங்காற்றில் ஏறிச்சென்று
புதுவார்த்தை தேடுவோம்

அந்திசாயும் நேரத்தில்
அழகு நிலவையும்
ரசிப்போம்

முந்தி முந்தி ஓடிடும்
முதல் அலையை
பிடிப்போம்

கடலை பிடிக்கும்
குழந்தைகள் போல்
மாறுவோம்

விடலைப்பருவம் போனாலும்
விண்ணில் மீன்கள்
பறிப்போம்

காலம் சென்றாலும்
கைகள் கோர்த்து
நடப்போம்

காதல் தேவையில்லை
காம வேலையுமில்லை
கவிதை சேகரிப்போம்

உலகை தாண்டி
பறக்கும் மனசின்
வேகம் அதிகரிப்போம்..

நிலவு வானில்
நீயும் நானும்
நேசக்குழந்தைகளாவோம்.

Montag, 18. März 2013

சாகும்வரை சுமப்பேன்


சாகும்வரை சுமப்பேன்

பச்ச வயலெங்கும்
பார்வைகள் மேய்கிறது
உச்சி வெயில் வந்து
உன்னினைவை தைக்கிறது

அச்சடித்த கடதாசி
அழிந்திடலாம் மாமா
மச்சம் போல் மனசில்
மாட்டிப்புட்டேன் ஆமா

வெத்தல போட்டதுபோல்
வெந்தது என் நெஞ்சும்
சத்தியமா ஒன்ன நான்
சாகும்வரை சுமப்பேன்
.
காற்றும் கடந்தது…

மின்னலொன்று
மண்ணில் தோன்ற
மெல்ல மெல்ல
நானெழுந்தேன்..

சின்னச்சின்ன
சிறகுமுளைக்க
வண்ணக்கவிகளை
தொடுத்தேன்..

பூவில் வீசும்
காற்றாய்மாறி
பூந்தென்றலாய்
நடந்தேன்..

புதிய பார்வை
என்னைத்தீண்ட
உன்னை
எதிர்நோக்கியே
வந்தேன்..

சந்தித்தவேளையில்
சந்தோசம் பிறந்தது
சிந்தித்த நேரத்தில்
சிறிய தூரம்
கடந்தது…

முதுகுகாட்டி
முகம் மறைத்து
போகின்றேன்..
மனதில் உந்தன்
நினைவுகளை
மீட்டுகின்றேன்..

கடந்து சென்ற
காலங்கள்
தொடர்ந்து
வருவதில்லை…
படர்ந்துவிட்ட
நேசமோ
இறந்துவிடுவதும்
இல்லை..

காற்றும் கடந்தது
கனவும் கலைந்தது
நேற்றும் மறைந்தது
நெஞ்சம் சுமந்தது..

Sonntag, 17. Februar 2013

கற்பனையில்..

கற்பனையில்..

உன்னை நினைத்திங்கு
உறக்கத்தில் தவிக்கின்றேன்
கண்ணைத்திறக்காமல்
கனவுலகில் மிதக்கின்றேன்

வண்ணக் கோலங்களில்
வாழ்வை ரசிக்கின்றேன்
எண்ணமெல்லாம் கோர்த்து
எழுத்தாக வடிக்கின்றேன்

எல்லைகள் தாண்டாமல்
இதையத்தை காக்கின்றேன்
சொல்ல மொழியில்லா
சுகத்தில் மிதக்கின்றேன்

ஆழ்கடல் மூழ்காமலே
அமுதத்தைப் பருகுகின்றேன்
பால்நிலவு போல் தினம்
பரந்தே விரிகின்றேன்

Mittwoch, 6. Februar 2013

உயிர்பாடும்..

உயிர்பாடும்

நிலாவொளியில் நெஞ்சம் பேசும்
நினைவுப்பூக்கள் அங்கே வீசும்
பகல்வெளியில் பார்வை தேடும்
பாதங்களும் உன்னை நாடும்

இதழ் ஓரம் இன்பம் பாயும்
இன்பம் தேனாய் மாறி கூடும்
முதல் ஆசை முத்தாய்ப் பூக்கும்
மௌனம் அங்கே யுத்தம் செய்யும்

கனிந்த காதல் கரங்கள் நீட்டும்
கவலையெல்லாம் பறந்தே போகும்
இனிமை இங்கே இசைகள் மீட்டும்
இருவர் நெஞ்சும் கலந்து பாடும்.

Donnerstag, 31. Januar 2013

நெஞ்சம் வாடி உன்னைத்தேடும்...!!!


 

 நெஞ்சம் வாடி உன்னைத்தேடும்...!!!

 
 பிள்ளைத்தமிழில் பேசும் நிலவே
முல்லை மலரே முகம் காட்டு
கொள்ளைகொள்ளும் இனியதமிழே
வெள்ளை மனதை நீ காட்டு

மெல்ல மெல்ல நெருங்க நானும்
மேகமாக போகிறாயே நீயும்
சொல்லச்சொல்ல நாவில் ஊறும்
செந்தமிழோ என்னை ஆளும்

எண்ணச் சிறகில் ஏறி நித்தம்
எழுத்தில் கவியாய் வாழும்
வண்ணக் கோலம் போடும்
வானவில்லாய் உந்தன் ஜாலம்

புண்ணாய் எந்தன் நெஞ்சம் வாட
பூவாய் உந்தன் அன்பைத் தேட
பெண்ணாய் இங்கு பூத்திருக்கும்
பேதை உள்ளம் உன்னைப்பாடும்


Mittwoch, 30. Januar 2013

கண்ணீர்

கண்ணீர்

விழிகளில் ஒருமேகமும்
பொழிந்திடப் போராடும்
மொழிகள் ஏதுமின்றியே
மௌனமாய் கரைந்தோடும்

ஊன் உருகி உயிரெழுதும்
உனக்காக தினம் கவியெழுதும்
வான் மழையாக வந்தாலும்
வாழ்த்தாக அதை மனமேற்கும்

ஊற்றாக பெருகினாலும்
ஊமையாக அனைபோடும்
ஏற்றாத ஒளியின்றியே
எவருக்குத் தெரியக்கூடும்





Montag, 21. Januar 2013

உன்னாலே உன்னாலே..



 உன்னாலே உன்னாலே..
வாழ்வதும்
வளர்வதும்
உன்னாலே
வீழ்வதும்
விழிநீர்ப்பதும்
உன்னாலே

மூழ்குவதும்
முத்தெடுப்பதும்
உன்னாலே
தாழ்வதும்
தவிப்பதும்
உன்னாலே

பாடுவதும்
பாதைதவறுவதும்
உன்னாலே
தேடுவதும்
தேவையில்லை
என்பதும்
உன்னாலே

வாடுவதும்
வலிசுமப்பதும்
உன்னாலே
ஓடுவதும்
ஓயாமல் துடிப்பதும்
உன்னாலே   









Sonntag, 20. Januar 2013

நீவேண்டும் என்றே நான் பாடினேன்...



 நீவேண்டும் என்றே நான் பாடினேன்...

உயிருக்குள் உயிரக வந்து
உணர்வுக்குள் தீயை தந்து
மனதுக்குள் கலவரம் செய்கின்றாய்

மனிதமும் கரைந்து போக
மறுநொடி இறந்து மீள-தினமும்
நீ என்னை தாக்குகின்றாய்


இரவு பாடும் பாடலாய்
இதயம் தேடும் தேடலாய்
உறவு வாழ வேண்டியே
உன்னை நானும் கேட்கின்றேன்

அழகான வாசம் நீயே
அதில் மேவும் ஜீவன் நானே
நிழலாக நித்தமும் தொடர்ந்தே
நீ வேண்டும் என்றே சொன்னேன்

பாடல்

Donnerstag, 17. Januar 2013

தேடுகின்றேன் வாடுகின்றேன் நான்...


தேடுகின்றேன் வாடுகின்றேன் நான்

தென்றலே வா
தேடுகின்றேன் நான்
இன்பமே வா
வாடுகின்றேன் நான்

தேகத்தின் மேலே
மேகமாய் நீந்தவே
மோகத்தின் தீயும்
மோதியே தாக்குதே

இரவின் ஈரம்
இதயத்தை தாக்கும்
உறவின் பாரம்
உயிரையும் வாட்டும்

துள்ளும் மனமும்
துடிக்கும் இதயமும்
அள்ளும் வேளையில்
அமைதி கொள்ளும்.

Mittwoch, 16. Januar 2013



 உன்னால் உயிர்க்கட்டும்....

உறைந்த பனிப்போல்
கரையாமல் இருக்கின்றேன்
உன்பாசப்பார்வைகளால்
தீண்டும் வரைக்கும்

அழுத விழிகளையும்
துடைக்காமலிருக்கிறேன்
அன்பின் கரங்கள்
தொடும் வரைக்கும்

உன்னைக்கண்டதும்
உதடுகள் பூக்கும்
மனம் காய்க்கும்
மௌனம் கனியும்

என் காதலே
என்னையும் எரித்துவிடு
உள்ளமும் உயிரும்
உன்னில் மரிக்கட்டும்

நேசிக்காமல் போனால்
சுவாசிக்காமலிருப்பேன்
உன்னால் உயிர்க்கட்டும்
என் ஜீவனும் மறுமுறை 

Dienstag, 15. Januar 2013

அமைதியிலும்…

அமைதியிலும்…

சித்தம் கலங்க
சிந்தை நொருங்க
முத்தம் கொடுக்கும்
முத்து நிலவே

பித்தம் தலைக்கேற
பேதமை எனைச்சூழ
நித்தமும் ஆளும்
நேச உறவே

பாத்தும் பாராமல்
பார்வை ஓயாமல்
சுத்தும் உள்ளத்தின்
சுடரே கதிரே

கத்தும் கடலாய்
கதறும் உடலோடு
சத்தம் செய்யாமல்
சாந்தி அடைகின்றேன்.


Sonntag, 13. Januar 2013


அன்பு
ஆணிவேரைப்போல்
வலிமையானது
வாழ்வானது
சாவின் சக்தியைவிட
சக்திவாய்ந்தது
உயிர்குடிக்கும்
கொடிய நோயானது..
மதி பறிக்கும்
மயக்க வெறியானது..
தீயின் பிளம்புகளால்
திரண்டு இருப்பது..
அன்பை அழிக்கவும்
முடியாது
அணைக்கவும் இயலாது
எந்த சக்தியாலும்
எதிர்த்து ஜெயிக்க
முடியாது!!

Samstag, 12. Januar 2013

சொல்லாத மௌனத்தில்…!!

புறமுதுகு காட்டுகின்றேன்
புரியவில்லை நீ
பூமுகத்தை மறைக்கின்றேன்
பார்க்கவில்லை நீ

இருளைக்கிழிக்கும் ஒளியை
உணரவில்லை நீ
இதயம் சுமக்கும் வலியையும்
காணவில்லை நீ

அமைதியாக போகின்றேன்
அறியவில்லை நீ
அழுதுவடித்து வாழ்வதையும்
அறியவில்லை நீ

அறிவுத்திறனால் ஆளுகின்றேன்
தெரியவில்லை நீ
அழிவிலிருந்து காக்கின்றேன்
தெரியவில்லை நீ

மழையின் துளிகள் பட்டு
மடிந்து போவாயென்று
இமைக்குடைகளை மூடியே
இருக்கின்றேன் பாரு

பொறுமையை இழக்காமல்
பூத்திருக்கின்றேன் நான்
புவியையும் கெடுக்காமல்
பேசாமல் இருக்கிறேன்

நல்ல மனிதனால்
தீயதை செய்யமுடியாது
நம்பியிருப்பவரின்
கையை உடைக்கமுடியாது

இதுவும் ஓர் அதிசயம்
இயற்கையின் புதுசுகம்
அற்புதம் நடந்துவிட
அறிவு கரம் கொடுத்திடும்

Donnerstag, 10. Januar 2013

கவிதைப்பூக்கள்!!!

என்னுள்  நீ வேண்டும்

எந்தையும் தாயுமாய்
என்றென்றும் நீ வேண்டும்
சிந்தையும் செயலுமாய்
சொந்தமாய் நீ வேண்டும்

பக்தியின் பாடல்போல்
பாலகோடி இசைவேண்டும்
சக்தியும் சிவனுமாய்
சந்தோசம் பெறவேண்டும்

எண்ணோடும் எழுத்தோடும்
இன்பங்கள் பெறவேண்டும்
மண்ணோடும் மரபோடும்
மலர்கின்ற நிலைவேண்டும்

தூங்கும் பொழுதெல்லாம்
தூங்காத கனவு வேண்டும்
ஏங்கும் நேரங்களிலெல்லாம்
எழுத்தாக நீ மலரவேண்டும்


உயிரே வாருவாயா!

ஆவி துடிக்கின்றது
அன்பே வருவாயா
கூவியழைக்கின்றேன்
குரல்கேட்டு வருவாயா

பாவி முகம் காண
பறந்து வருவாயா
தேவி தரிசனத்தை
தினமும் தருவாயா

உருகிப் பாடுகின்றேன்
உன் அருள் தருவாயா
பெருகிடும் அன்பினில்
பிரியாமல் இருப்பாயா


கவிமடல்கள்..