Sonntag, 17. Februar 2013

கற்பனையில்..

கற்பனையில்..

உன்னை நினைத்திங்கு
உறக்கத்தில் தவிக்கின்றேன்
கண்ணைத்திறக்காமல்
கனவுலகில் மிதக்கின்றேன்

வண்ணக் கோலங்களில்
வாழ்வை ரசிக்கின்றேன்
எண்ணமெல்லாம் கோர்த்து
எழுத்தாக வடிக்கின்றேன்

எல்லைகள் தாண்டாமல்
இதையத்தை காக்கின்றேன்
சொல்ல மொழியில்லா
சுகத்தில் மிதக்கின்றேன்

ஆழ்கடல் மூழ்காமலே
அமுதத்தைப் பருகுகின்றேன்
பால்நிலவு போல் தினம்
பரந்தே விரிகின்றேன்

Mittwoch, 6. Februar 2013

உயிர்பாடும்..

உயிர்பாடும்

நிலாவொளியில் நெஞ்சம் பேசும்
நினைவுப்பூக்கள் அங்கே வீசும்
பகல்வெளியில் பார்வை தேடும்
பாதங்களும் உன்னை நாடும்

இதழ் ஓரம் இன்பம் பாயும்
இன்பம் தேனாய் மாறி கூடும்
முதல் ஆசை முத்தாய்ப் பூக்கும்
மௌனம் அங்கே யுத்தம் செய்யும்

கனிந்த காதல் கரங்கள் நீட்டும்
கவலையெல்லாம் பறந்தே போகும்
இனிமை இங்கே இசைகள் மீட்டும்
இருவர் நெஞ்சும் கலந்து பாடும்.